1970ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் எழுச்சியோடு துவங்கப்பட்ட மின் ஊழியர் மத்திய அமைப்பு தனது 50வது ஆண்டை நிறைவு செய்கிறது. மத்திய அமைப்பு கடந்து வந்த பாதை மலர்ப் பாதை அல்ல. அது நெருப்பாற்றில் நீந்திய வரலாறு.
அன்புத் தலைவர் டி. ஜானகிராமன், தோழர்கள் வி.பி. சிந்தன், கே. ரமணி, ஏ. நல்லசிவன் சி. கோவிந்தராஜன், பி. சி.
வேலாயுதம், மதுரை, எம் மீனாட்சிசுந்தரம், போன்ற எண்ணற்றதலைவர்களால் உருவாக்கப்பட்ட மின் ஊழியர் மத்தியஅமைப்பு, தமிழக மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள் ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கான சலுகைகளை பெற்றுத் தருவதோடு, தமிழக மின் நுகர்வோர்களுக்கு தடையில்லா மின்சாரம் , தரமான மின்சாரம் , மக்கள் வாங்கும் விலையில் மின்சாரம், என்ற கோரிக்கையை முன்னெடுத்துச்சென்று போராடும் அமைப்பாக இன்றைக்கும் இயங்கி வருகிறது.
நம்முடைய மகத்தான தலைவர்கள் காட்டிய பாதையில் மின் துறையை பொதுத் துறையாக பாதுகாக்கவும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கான கோரிக்கையை வலியுறுத்துகின்ற அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.மின் ஊழியர் மத்திய அமைப்பு துவங்குவதற்கு முன்பு மின் தொழிலாளர் இணைப்புக் குழு ஒன்று சி. கோவிந்தராஜன் தலைவராகவும் து. ஜானகிராமன் அமைப்பாளராகவும் கொண்டு உருவாக்கப்பட்டது.
ஒட்டுமொத்த விடுப்பு(mass casual leave)
1970இல் மே மாதம் ஊதிய உயர்வு கோரிக்கைக்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நியாயம் கிடைக்காத காரணத்தால்மின் ஊழியர்கள், பொறியாளர்கள் மே 20, 21, 22 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தம் செய்தனர். அன்றைய திமுக அரசு இரும்புக் கரம் கொண்டு போராட்டத்தை நசுக்க முயன்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைவிலங்கிட்டு வீதிகளில் இழுத்துச் சென்ற அவலமும் நடந்தது.20ஆயிரம் பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.அதேபோல கோவை மாவட்டம் ஆழியாறு அணைக்கட்டு பகுதி தொழிலாளர்களின் தினக்கூலி போராட்டம் கே. ரமணி, கே. சி. கருணாகரன், துளசிதாஸ் ஆகிய தலைவர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது .
அதேபோல எச்.சி.சி கான்ட்ராக்டர் கம்பெனி ,ஒப்பந்த ஊழியர்களுக்கு நியாயமான கூலி வழங்காததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் அருமைத் தோழர்கள் பி. கண்ணன், கே.வி.ராதாகிருஷ்ணன், கே.கே.தாஸ் தணக்கன் போன்றோர் தலைமையேற்று நடத்திய போராட்டம் .நெல்லை மாவட்டத்தில் அருமை தோழர் பி.சி. வேலாயுதம், ஒப்பந்த ஊழியர்களுக்கு கூலி உயர்வுக்காக நடத்திய போராட்டம்.இவை தவிர அனைத்து போராட்டங்களும் மத்தியஅமைப்பின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிவு செய்யப்பட வேண்டியவை ஆகும்.மலர் விளம்பரம் சேகரித்தமைக்காக 44 தோழர்கள் மீதுநடவடிக்கை எடுத்தது வாரிய நிர்வாகம். வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி அந்தத் தோழர்களை பாதுகாத்ததில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் நடவடிக்கை, ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் ஏற்படுத்தியது ஒரு வரலாறு.எமர்ஜென்சி காலத்தில் சிறைவாசமும் சஸ்பெண்ட் நடவடிக்கைகளும் டிஸ்மிஸ் நடவடிக்கைகளும், ஆண்டு உயர்வுவெட்டு, பதவி இறக்கம், இடமாறுதல் என அத்தனை கொடுமைகளையும் இன்முகத்தோடு ஏற்று இந்த தலைவர்களால் உருவாக்கப்பட்ட மின் ஊழியர் மத்திய அமைப்பை கடந்த 50 ஆண்டுகளாக அமைப்பின் தலைவர்களும் உறுப்பினர்களும் கட்டிக்காத்து வருகின்றனர்.
மின் ஊழியர் மத்திய அமைப்பின் போராட்டத்தால் ஏறத்தாழ 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்தி அவர்களது வாழ்வில் ஒளியை ஏற்றி வைத்துள்ளது. ஒப்பந்த ஊழியர்களின் போராட்டமும் அவர்களது பணிநிரந்தரத்திற்கான முழக்கமும் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளவரை ஒப்பந்தஊழியர்களை நிரந்தரப்படுத்தக் கோரி நிரந்தர ஊழியர்களையும் இணைத்துக்கொண்டு போராடுவோம் . நமது தலைவர்கள் காட்டிய பாதையில் சென்று அவர்களை நிரந்தரப்படுத்துவோம் என சூளுரைப்போம்.நிரந்தர தொழிலாளர்களுக்கான பிரச்சனைகளும் பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்து நடவடிக்கையிலும் தொழிலாளி வர்க்க போர் படையின் தளபதிகளாக மத்திய அமைப்பு அன்றும் இன்றும் விளங்கி வருகிறது.1. 7 . 86 முதல் களப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பான பென்சன் பெற்றுத் தந்ததில் மத்தியஅமைப்பின் பங்கு மகத்தானது.மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தொடர்ந்துபோராடி வருகின்றது. மின்சார வாரியம் பொதுத் துறையாக நீடித்து மக்கள் சேவை தொடர வேண்டும் என்ற உன்னதநோக்கத்தோடு நமது தலைவர்கள் காட்டிய பாதையில் தொழிலாளர் ஒற்றுமையையும் தொழிற்சங்க ஒற்றுமையையும் பலப்படுத்தி பாதுகாத்து வருகிறோம்.
தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பின் அனைத்துஉறுப்பினர்களுக்கும் பெருமை என்னவென்றால் மத்திய அமைப்பின் பொன்விழா காலத்தில் நாங்களும் உறுப்பினராக இருக்கிறோம் என்பதே ஆகும்.தலைவர்களின் போராட்டங்களையும் தியாகங்களையும் என்றென்றும் நினைவுகூர்ந்து அனைவரிடமும் கொண்டு செல்வோம் மத்திய அமைப்பை பலப்படுத்துவோம். வர்க்க ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வோம்.
===எஸ்.ராஜேந்திரன்===
பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)